Displaying Publisher's Introduction for Vol 1

  தெய்வத்தின் குரல் : முதற்பகுதி - பதிப்புரை

  அன்பும் அருளும்

   குடும்பத்தில் ஏதாவது பிரச்னைகள் எழுமானால் குடும்பத் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்னைகளோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கிறோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்கமுடியும்?

   தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம் தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீரக்க முடியும்.

   இன்று அவதார புருஷராக - நாயன்மாராக - உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் தாம் குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏறபடும் சந்தேகங்களுக்கு - சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.

   பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனத்துக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சன்னிதானத்தின் முன் நின்றால், ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர்பூந்தென்றல் நம் மேனியில் படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகின்றது, வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. இவை அவர்கள்பால் முழு ஏடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை. (கடவுளிடமும் பெரியவர்களிடமும் முழு பக்தி கொண்ட கூட்டம் மட்டுமே அந்தச் சன்னிதானத்தின் முன்பு இத்தகைய இன்பானுவ உணர்வையும் உரத்தையும் பெற முடியும்.)

   பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக்கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு, உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள். துன்பத்தைத் துரத்துபவர்கள். உலக மக்களின் நன்மைக்காகவே நாழிகை தோறும் பூஜை செய்பவர்கள்.

   அவர்கள் செய்த தவமும் - செய்து கொண்டிருக்கிற தவமும், பெற்ற அருளும் - பேணிக்காக்கும் பேரறமும் இந்த உலகத்தை வளப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

   பெரியவர்கள் பல்துறை அறிவும், பல்கலைச் செறிவும் நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் நடமாடும் தெய்வம் மட்டுமல்ல; நடமாடும் பல்கலைக்கழகமும்கூட. அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து மக்கள் நல் அறிவு பெற, நாடு நலம்பெற, உலகம் உய்வு பெற, எத்தனையோ அறிவு மணிமொழிகள் அறிவு உரை வடிவில் உதிர்ந்துள்ளன.

   மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் அவர்கள் வேதங்களிலிருந்தும் இதிகாச புராண சாஸ்திரங்களிலிருந்தும் எத்தனையோ மேற்கோள்கள் காட்டிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுந்த குரல் காற்றோடு கலந்து போகாமல், என்றும் நின்று நிலவும் வண்ணம் தெய்வத்தின் குரலாகி அவை அச்சு ஏட்டில் பதிவாகிச் சிறந்த நூலாக இப்பொழுது வடிவெடுத்துள்ளது. சொர்ணமூர்த்தியின் எண்ண வடிவங்களே கருத்து வண்ண வடிவங்களாகியுள்ளன.

   ஆசாரிய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ - இதிகாசங்களையோ - வேதங்களையோ - தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்குச் சாறு பிழிந்து தருவதுபோல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச் சாறுகள்.

   இந்து மதத்தின் பெருமையையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச் சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்நூலில் அவர்கள் குரல், உரை வடிவில் ஒலிப்பதைக் கேட்களாம்; படிக்கலாம்.

   மொத்தத்தில் இது ஒரு அருட்பெரும் அறிவுக்களஞ்சியம்; ஞானக்களஞ்சியம்.

   இதைப்படித்தால் பாமரன் பண்டிதனாகலாம். அறிஞன் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம். இந்தத் தெய்வத்தின் குரலை, 'பல டேப்' களிலிருந்தும் கல்கி பத்திரிகையின் அருள் வாக்குகளிலிருந்தும் பல்வேறு ஸ்ரீமுகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர், காஞ்சிப் பெரியவர்களின் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு. ரா. கணபதி அவர்கள்.

   திரு. ரா. கணபதி அவர்கள் எதையும் ஒழுங்காகச் செய்பவர்கள், செய்ய வல்லவர்கள். ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்களின் அருள் வாக்குகளை மிகுந்த அன்போடு, அக்கறையோடு, பொறுப்புணர்ச்சியோடு பகுதி பகுதியாகப் பொருள் வரிசையில் தொகுத்துத் தந்துள்ளார்கள். இதைப் பெரும் பாக்கியமாகக் கருதி வானதி பதிப்பகத்தின் பக்தி உணர்வோடு, முழு ஈடுபாட்டோடு, உற்சாக உணர்ச்சியோடு வெளியிட்டுள்ளேன்.

   இந்த நல்வாய்ப்பை, ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீசுவரர் அருட்கடாட்சம் என்றே கருதுகிறேன். ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்களின் அன்பையும், அருளையும், கருணை உள்ளத்தையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. தினம் தினம் நான் போற்றி வணங்கும் தெய்வம் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஆனார்கள். என் இதய அஞ்சலியை காஞ்சிப் பெரியவர்களின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.

   தெய்வத்தின் குரலாகிய இந்நூலை வானதி பதிப்பகத்தில் வெளியிட ஆசி வழங்கவேண்டுமென வேண்டி, நடமாடும் தெய்வமாகத் திகழும் உற்சவ மூர்த்தியான ஸ்ரீ புதுப்பெரியவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு கடிதம் எழுதினேன். அச்சமயம் ஜாம்ஷெட்பூரில் முகாமிட்டிருந்த ஸ்ரீ புதுப்பெரியவர்கள் உடனே இதனை அற்புதமாக வெளியிடும்படி ஆசியருளினார்கள், பெரிதும் ஊக்குவித்தார்கள். கடவுளின் கிருபையாலும் பெரியவர்களின் ஆசியாலும் உங்கள் அன்பாலுமே இந்நூல் இத்துணைச் சிறப்பாக வெளிவந்துள்ளதென உணர்கிறேன்.

   ஆசாரிய சுவாமிகளின் அருள்மொழிகள், பொன்னேட்டில் பதிக்கத்தக்கவை. ஆனால் பசுந்தாளில்தான் பதிப்பித்துத் தந்துள்ளேன்.

   குருபக்தியோடு அவன் தாளை வணங்கியே பதிப்பித்துத் தந்துள்ளதால், எளியேனின் பதிப்பை, எழில் பதிப்பாகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

   இந்தத் தெய்வத்தின் குரல் உங்கள் இல்லங்களில் எல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

   அன்பு, அருள் ஒலிகள் நிரம்பிய இந்நூல் இவ்வளவு அழகாக உருவாகியதற்குக் காரணம் தொகுப்பாசிரியர் திரு. ரா. கணபதி அவர்களே. அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இந்த அருள் வாக்குகளில் பல கல்கி பத்திரிகையில் வெளியானவை. கல்கி காரியாலயத்தாருக்கு நன்றி. இந்நுலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த மெட்ரோபாலிடன் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ஸ்ரீ நடராஜ அய்யர் அவர்களுக்கும், அச்சகத் தோழர் அனைவர்க்கும் நன்றி. வணக்கம்.

   ஏ. திருநாவுக்கரசு  வானதி பதிப்பகம்